எபோலாவால் சாக்லேட் விலை 20 சதவீதம் உயரும் அபாயம்
ஆக்ரா: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் உலக அளவில் சாக்லேட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொடர்ந்து இதே வேகத்தில் பரவினால் அது பிற நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எபோலாவால் சாக்லேட் பிரியர்களுக்கு பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
கானா
உலக அளவில் பயன்படுத்தப்படும் கொக்கோவில் 60 சதவீதம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் எபோலாவின் தாக்கம் இல்லை.
எல்லை
கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவை லைபீரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இருப்பதிலேயே லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது.
பயம்
கொக்கோ அதிக அளவில் விளைந்திருக்கின்றபோதிலும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவுக்கும் எபோலா வைரஸ் பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து
எபோலா வைரஸின் தாக்கம் உள்ள நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து பாதிப்பால் கொக்கோவை ஏற்றுமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
விலை
கொக்கோ ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் சாக்லேட் விலை 20 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொக்கோ கொட்டைகளின் விலை 18.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் எபோலாவில் அதன் விலை மேலும் அதிகரிகக்கூடும் நிலை உள்ளது.