ஜனநாயக விரோத நடவடிக்கை... தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தர்ணா... மம்தா ஆக்ரோஷம்
கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமான செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தனது பிரசாரத்திற்குத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் இன்று மதியம் 12 மணிக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தலில் 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அனைத்துக் கட்சி தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரம் தடை
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத ரீதியாக வாக்குகளைச் சேகரிக்கும் வகையில் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் இது குறித்துத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது. அதன்படி நேற்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம்
இது குறித்துத் தேர்தல் ஆணையம் கூறுகையில், மம்தா அளித்துள்ள விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு தேர்தல் காலத்தில் சமூகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதன் காரணமாக அவர் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்து உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்திருந்தது.
தர்ணா போராட்டம்
இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமான செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் இன்று மதியம் 12 மணிக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
கறுப்பு நாள்
தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான டெரெக் ஓ பிரையன் கூறுகையில், ஏப்ரல் 12 ஜனநாயகத்தில் கருப்பு நாள். இதையெல்லாம் தாண்டி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் வெல்லும் என்று தெரிவித்தார்.
பாஜக புகார் என்ன
தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 15, 2019இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார்.