தினகரன் கொடுத்த பணத்தை சுகேஷுக்கு கைமாற்றி விட்ட ஹவாலா கும்பல்!
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டிடிவி தினகரன் கொடுத்த பணத்தை சுகேஷுக்கு கொடுத்தது ஹவாலா கும்பல் என்று விசாரணையில் தெரியவந்தது.
டெல்லி: இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டிடிவி தினகரன் கொடுத்த பணத்தை சுகேஷுக்கு கொடுத்தது ஹவாலா கும்பல் என்று விசாரணையில் தெரியவந்தது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் பெயர் அடிப்பட்டதும், சுகேஷ் யாருங்க என்று செய்தியாளர்களிடமே அப்பாவி போல் கேட்டார் தினகரன். இந்நிலையில் டெல்லி போலீஸார் தினகரனிடம் 3 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
எனினும் அவர் சுகேஷை தனக்கு தெரியாது என்று கூறினார். இதேபோல் தினகரன்தான் பணத்தை கொடுத்தார் என்று அடித்து சொல்லிய சுகேஷோ நேற்று பத்திரிகையாளர்கள் முன்பு தனக்கு அவர் யாரென்றே தெரியாது என்றார்.
இந்நிலையில் நேற்று 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தினகரனிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர் உண்மையை சொல்லவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய இடத்துக்கு டெல்லி போலீஸார் சுகேஷை அழைத்து வந்தனர்.
அப்போது இரட்டை இலைக்கான பேரம் பேசியபோது தினகரனிடம் தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக சுகேஷ் தெரிவித்தார். அதற்கும் தினகரன் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் தினகரன் கொடுத்த ரூ.1.30 கோடி அதாவது போலீஸார் தன்னிடம் இருந்து கைப்பற்றிய பணத்தை சாந்தினி சவுக்கில் வைத்து ஹவாலா கும்பல் ஒன்று தினகரன் கொடுத்ததாக தன்னிடம் கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்தார்.
இதுதான் தாமதம். உடனே வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டார். என்னதான் சுகேஷுடன் தினகரன் நடத்திய தொலைபேசி ஆதாரங்களை கிடைத்தபோதிலும் சென்னையிலிருந்து டெல்லிக்கு சுகேஷுக்கு அனுப்பிய பணம் ஹவாலா கும்பல் மூலம் அளிக்கப்பட்டதுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாகும்.