வாழ்க்கையிலேயே முதல் முறையாக திஹார் சிறையில் அடைபடும் டிடிவி தினகரன்!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரனை மே 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டதை அவர் திஹார் சிறையில் அடைக்கப் பட உள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி.தினகரன் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு.
முதற்கட்டமாக கொடுக்கப்பட்ட ரூ.1.30 கோடி பணத்துடன் டெல்லி ஹோட்டலில் தங்கி இருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். சுகேஷ் சந்திரசேகர் வாக்கு மூலத்தை அடுத்து டிடிவி தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
டிடிவி தினகரன் கைது
டெல்லியில் கடந்த ஏப்ரல் 22 முதல் 26 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவல்
இதையடுத்து ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து டெல்லி தீஸ்ஹாசரே மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இரண்டு நாட்கள் டெல்லியிலும் விசாரணை நடைபெற்றது.
15 நாட்கள் நீதிமன்ற காவல்
இந்நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டிடிவி தினகரனை மே 15 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் மே 15 வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திஹார் சிறை
நீதிமன்ற காவலை அடுத்து டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக துணை பொதுச்செயலாளராக சொகுசாக வலம் வந்த டிடிவி தினகரன் இன்று முதல் 15 நாட்களுக்கு திகார் சிறையில் காலம் தள்ளப் போகிறார்.
ஜாமீன் கிடைக்குமா?
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவருக்கு ஜாமீன் பெற்று விட வேண்டும் என்று வழக்கறிஞர் குழுவினர் போராடி வருகின்றனர். எனினும் அவர் திஹார் செல்வது உறுதியாகிறது.