நடத்தை விதிகளை மீறியதாகப் புகார்: கிரண் பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை அளித்துள்ளது
புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவரிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதிக்கு கடந்த 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது தேர்தல் அதிகாரிகள் சிலரை கிரண்பேடி அழைத்துப் பேசியதாகவும், அவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே சம்பந்தப்பட்ட தொகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கும்போது விதிகளுக்குப் புறம்பாக கிரண்பேடி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் டி.முருகன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியதற்கு கிரண்பேடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், அது திருப்தியளிக்கும்படி இல்லை என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், எதிர் காலத்தில் இதுபோன்று செயல்படக்கூடாது என கொள்ளுமாறு கிரண்பேடிக்கு அறிவுரை வழங்கியுள்ளது.