குஜராத்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- பேட்டியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு பதிய உத்தரவு!
குஜராத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரது பேட்டியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது
அகமதாபாத்: குஜராத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு பதியவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பேட்டியை சில ஊடகங்கள் ஒளிபரப்பின. அதில், பேசிய ராகுல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை குறித்து பேசி இருந்தார்.
இது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்தது. இதனடிப்படையில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், டிசம்பர் 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் ராகுல் காந்தி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்றுதான் குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
அத்துடன் ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பு செய்த அனைத்து ஊடகங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.