ஆர்கே நகர் பணப்பட்டுவாடா: எடப்பாடி. அமைச்சர்கள், தினகரன் மீது வழக்கு- தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட்டனர்.
முன்னதாக இந்த தேர்தலுக்கு முன்னர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டனர்.
பறக்கும் படை
இந்நிலையில் அந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படையை வைத்து கண்காணித்து வந்தனர். எனினும் பேருந்துகளிலும், லாட்ஜுகளிலும் வைத்து பணம் விநியோகிக்கப்பட்டது.
பரிசு பொருள்கள்
அதேபோல் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்களும், மளிகைக் கடை பில்லாகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகளில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் பணம் விநியோகிப்பதற்காக அமைச்சர்கள் பணம் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்ட கோப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் ரத்து
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறை புகார் அளித்ததன் பேரில் ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆளும் கட்சி மீது புகார் அளித்தும் போலீஸார் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை.
ஆர்டிஐ சட்டம்
இதனால் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். வைரக்கண்ணனுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் மீதும் ....
அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாப்படவில்லை.
உயர்நீதிமன்றத்தில்..
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.