நிதிஷ்குமார் கோஷ்டிக்கே ஐக்கிய ஜனதா தள் கட்சி, அம்பு சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பு
நிதிஷ்குமார் தலைமையிலான அணியே உண்மையான ஐக்கிய ஜனதா தள் என தீர்ப்பளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
டெல்லி: நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கே ஐக்கிய ஜனதா தள் கட்சி பெயரும் அதன் அம்பு சின்னமும் என தேர்தல் ஆணையம் பரபரபான தீர்ப்பை அளித்துள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள்- லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. திடீரென இந்த கூட்டணி முறிய பாஜகவுடன் நிதிஷ்குமார் கை கோர்த்தார்.
சரத் யாதவ் போர்க்கொடி
பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைத்தற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஐக்கிய ஜனதா தள் கட்சி இரண்டாக உடைந்தது.
தேர்தல் ஆணையத்தில் புகார்
சரத் யாதவ் தலைமையிலான அணி தாங்களே உண்மையான ஐக்கிய ஜனதா தள் என்று உரிமை கோரியது. இது தொடர்பாக சரத் யாதவ், நிதிஷ்குமார் தரப்புகள் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்தன.
சரத்யாதவுக்கு தோல்வி
இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம் நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கே பெரும்பான்மை இருப்பதால் ஐக்கிய ஜனதா தள் கட்சி பெயரும் அதன் அம்பு சின்னமும் ஒதுக்கப்படுவதாக இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள் கட்சியை பீகார் மாநில கட்சியாகவும் அங்கீகாரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
நீதிமன்றம் போக முடிவு?
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சரத் யாதவ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத்யாதவ் அணி நீதிமன்றத்துக்கு செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.