புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி ஆரம்பம்: இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்!
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், புதிதாக வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வட்டாட்சியர், நகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலோ, மாநகராட்சிக் பகுதிகளில் மண்டல அலுவலகங்களிலோ அளிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பத்துடன் இருப்பிட மற்றும் வயதுச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்பவர்கள் படிவம் எட்டையும், பெயர் நீக்கத்துக்கு படிவம் ஏழையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை http://www.elections.tn.gov.in/eregistration/ என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.