கல்விக்கடன் வட்டி தள்ளுபடிக்கு தேர்தல் கமிஷன் தடை… பிரசாரத்திலும் பேசக்கூடாது
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது பற்றி தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி லோக்சபாவில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, ‘‘நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2009-10 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், 2009 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி மானியம் வழங்கும் மத்திய திட்டத்தை அறிவித்தார்.
அதில் மாணவர்களின் கல்விக்காலத்திலும், சற்றே பின்னர் உள்ள காலத்திலும் வட்டிச்சுமையை அரசே ஏற்றது. இது கல்விக்கடன் வாங்கிய மாணவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இருப்பினும், 2009 மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களைப் பொறுத்தமட்டில் இது பாரபட்சமாக அமைந்திருப்பதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
9 லட்சம் மாணவர்கள்
எனவே 2009 மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் கல்விக்கடன் வாங்கி 2013 டிசம்பர் 31ம் தேதி நிலுவையில் உள்ள கல்விக்கடன்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டியை அரசே செலுத்தும். இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள் சுமார் ரூ.2,600 கோடி அளவுக்கு பலன் அடைவார்கள்'' என கூறினார்.
தேர்தல் கமிஷன் தடை
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன, இந்த கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தை இப்போது அமல்படுத்த மத்திய நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
பிரசாரத்தில் பேச தடை
வட்டி தள்ளுபடி தொடர்பாக தேர்தல் காலத்தில் எந்தவித பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது என்பதையும் மத்திய நிதி அமைச்சகம் உறுதி செய்யுமாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தேர்தல் முடிவுக்கு பின்
இந்தத் திட்டத்தை தேர்தல் நடவடிக்கைகள் முடிந்தபின்னர் அமல்படுத்தலாம் என தேர்தல் கமிஷன் கூறி இருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.