வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்க முடியுமா? நஜீம் ஜைதி ஓபன் சேலஞ்ச்!
வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறும் என்று நிரூபிக்க முடியுமா என்று தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சவால் விடுத்துள்ளார்.
டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டவை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும் என்றும் ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றும் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மாற்றம் செய்ய முடியாது
இந்த செயல்முறை விளக்கத்திற்கு பின்னர் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவித குளறுபடியும் செய்ய முடியாது, அவற்றின் இன்டர்னல் சர்க்யூட்டை மாற்றியமைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.
ஆதாரமில்லை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் வலுவான ஆதாரம் ஏதும் அளிக்கவில்லை. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்" என்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டவை என்றும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றும் நியாயமான ஒளிவு மறைவற்ற தேர்தலை நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் நஜீம் ஜைதி கூறினார்.
அரசியல் கட்சிகளின் கோரிக்கை
அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டை அடுத்து கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது பெரும்பாலான கட்சிகள், வாக்களித்த நபர் அவருடைய வாக்கு பதிவானதை தெரிந்து கொள்ளும் விவிபிஏடி கருவி பயன்பாட்டுக் கொண்டுவரப்பட்டால் இனி எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தலாம் எனக் கூறியிருந்தன.
ஓபன் சேலஞ்ச்
இந்நிலையில், இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி இயந்திரம் பயன்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் ஜுன் மாதம் 3ம் தேதி முதல் அதை நிரூபிக்கலாம் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் சவால் விடுத்துள்ளார்.