நாட்டில் வருமான வரி செலுத்துவோர் 5.5% தான்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று லோக்சபாவில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி இன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையின் சிறப்பு அம்சங்களில் சில,
7வது ஊதிய கமிஷன், ராணுவத்தின் ஒரு பதவி ஒரு ஓய்வூதிய காரணமாக 2017ம் நிதியாண்டில் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்
5.69 சதவீதமாக உள்ள நாட்டின் பணவீக்கத்தை 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி முயற்சிக்க வேண்டும்
2016ம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி (நாட்டின் மொத்த உற்பத்தி) 7 சதவீதம் முதல் 7.75 சதவீதமாக இருக்கும்
இதே ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீதமாகக் குறைக்கப்படும்
2016-2017ம் நிதியாண்டில் பொருளாதார ரீதியாக உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும்
சேவைத்துறை தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்
நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் ஜிடிபி 8- 10 சதவீதம் வரை இருக்கும்
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜிடிபியோடு ஒப்பிடுகையில் 1 முதல் 1.5 சதவீதத்துக்குள் இருக்கும்
பொதுத்துறையில் நெருக்கடிக்கு உள்ளான மற்றும் நஷ்டம் ஏற்படுத்தும் பிரிவுகளை மறுசீரமைக்க வேண்டும் அல்லது விற்க வேண்டும்
2019ம் ஆண்டுக்குள் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 1.8 லட்சம் கோடி நிதி உதவி தேவைப்படும்
நாட்டில் வருமான வரி செலுத்துவோர் 5.5 சதவீதமாக உள்ளது. இதை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.