நிலக் கொள்ளை வழக்கு: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்கள் திடீர் கைது!
டெல்லி: பிகானீர் நிலக் கொள்ளை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் இரு நண்பர்களை அமலாக்கப் பிரிவு அதிரடியாக கைது செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அமலாக்கப் பிரிவு இந்நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிகாரிகள் துணையுடன் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு ராபர்ட் வதேராவின் நிறுவனம் விற்பனை செய்தது என்பது புகார். ஹரியானாலும் இத்தகைய புகார் வதேராவின் நிறுவனம் மீது எழுந்தது. இதனை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா என்கிற அதிகாரி பந்தாடப்பட்டு பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.
இதனிடையே ராஜஸ்தானில் வதேரா நிறுவனம் தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க பாஜக அரசு பரிந்துரை செய்திருந்தது. மேலும் நில ஊழல் விவகாரங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிகானீர் நில ஊழல் விவகாரத்தில் ஜெய்பிரகாஷ் பஹர்வா மற்றும் அசோக் குமார் ஆகியோரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலடி நிறுவனத்துக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே சோனியா காந்தியின் மருமகன் வதேராவின் நிறுவனத்தை குறிவைத்து அமலாக்கப் பிரிவு களமிறங்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.