பண மோசடி வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.749 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஹைதராபாத்: பண மோசடி வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, பண மோசடி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. 11 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, ஜெகன் மோகன் ரெட்டி, அவரது மனைவி ஆகியோருக்கு சொந்தமான ரூ.749 கோடி மதிப்பிலான சொத்துக்களை இன்று ஜப்தி செய்துள்ளது.
அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பண மோசடியில் சம்பந்தப்பட்ட அசையும் சொத்துக்கள் (ரூ.404,72,32,182), அசையாச் சொத்துக்கள் (ரூ.344,38,10,378) என மொத்தம் ரூ.749.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை இணை இயக்குனர் (ஹைதராபாத் மண்டலம்) உமாசங்கர் கவுட் தெரிவித்தார்.
ஏற்கனவே ஜெகன் மற்றும் நிதி மோசடி வழக்கு தொடர்பாக அவருக்கும், நிம்மகடா பிரசாத் என்பவருக்கும் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு கையகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.