பீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமாரின் ரூ2.51 கோடி சொத்துகள் முடக்கம்!
பீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில் குமாரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பாட்னா: பீகாரில் ஊழல் புகாரில் சிக்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில் குமாரின் ரூ2.51 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார் 1996-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. பீகாரில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இதற்கு முன்னர் மங்கர் ஆட்சியராகவும் பாட்னா மாநகராட்சி ஆணையராகவும் செந்தில் குமார் பணியாற்றினார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
மேலும் 100க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் பெற்றார் செந்தில்குமார் என்பதும் குற்றச்சாட்டு. பாட்னாவில் சகோதரர் அய்யப்பன் பெயரில் பினாமி நிறுவனங்களையும் நடத்தினார் என்பதும் அமலாக்கத் துறையின் புகார்.
இதையடுத்து செந்தில் குமாருக்கு சொந்தமான ரூ2.51 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தின் அரியலூரில் உள்ள அறக்கட்டளை உள்ளிட்ட சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.