நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமாக வெளிநாட்டிலும், இந்தியாவிலும் உள்ள ரூ.637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் பதுங்கி இருக்கிறார் வைர வியாபாரி, நிரவ் மோடி. அவரது குடும்பத்தினரும் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் மும்பையில் உள்ள உள்ள அவரது வீடு உட்பட சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டிருந்தது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் உட்பட வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்தம் ரூ.637 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளனர். வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.22.69 கோடி மதிப்புள்ள வைரங்கள் திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளன.
நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வேறு எந்த நாட்டுக்கு செல்ல முற்பட்டாலும் கைது செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.