ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறன் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து ஒத்திவைத்து வந்ததது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கிறேன் என தீர்ப்பளித்தார்.
தற்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுவித்ததற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. கறுப்புப் பணம் பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலனை செய்யவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.