விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்துக்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை
விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்து பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
மும்பை: விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது லண்டனில் தலைமறைவாக இருந்து வரும் அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அவரை இந்தியா கொண்டு வர பல நடவடிக்கைகளை மேற்கொண்டது அமலாக்கத்துறை. ஆனால் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நாடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவுப்படி விஜய் மல்லையாவின் ரூ 1,620 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கோர்ட்டு மறுத்து விட்டது.