மல்லையா, 6 கிங்பிஷர் நிர்வாகிகள் மீது பண மோசடி வழக்கு!
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடி கடனை திருப்பிச் செலுத்தாது தொடர்பான வழக்கு இது. மல்லையாவுடன் சேர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ள 6 பேரும் கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் ஆவர். ஏற்கனவே இவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு எப்ஐஆர் போடப்பட்டது. அதன் அடிப்படையில் இவர்கள் மீது தற்போது அமலாக்கப் பிரிவு வழக்குப் போட்டுள்ளது.
சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி, மத்திய கடன் மீட்பு தீர்ப்பாயத்தை அணுகி, விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட கடனை வசூலித்துத் தருமாறும், அதற்கு வசதியாக அவரைக் கைது செய்யுமாறும் கோரியிருந்தது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டேட் பாங்க் கடன் அளித்திருந்தது
கிங்பிஷர் நிறுவனத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 நிறுவனங்கள் 7 ஆயிரம் கோடி வரை கடன் அளித்திருந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்டவையும் கடன் அளித்துள்ளன. ஆனால் எந்தக் கடனையும் மல்லையா திருப்பித் தரவில்லை.
இதையடுத்து கடந்த ஆண்டு அவரை defaulter என ஸ்டேட் வங்கி அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் defaulter ஆக அறிவித்தது.
இதையடுத்து மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனம் கையகப்படுத்தியது. மேலும் மல்லையாவுக்கு ரூ. 515 கோடி கொடுத்து செட்டில்செய்து தலைவர் பதவிலிருந்தும் அனுப்பிவைத்து விட்டது. இதனால் விரைவில் நாட்டை விட்டு மல்லையா எஸ்கேப் ஆகலாம் என்ற பரபரப்பு கிளம்பியது.
இதையடுத்து சுதாரித்த வங்கிகள் மல்லையாவை தப்பிவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில்தான் மல்லையா உள்ளிட்ட 7 பேர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது.