ரூ.900 கோடி மோசடி.. மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை
மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. நெருக்கடி அதிகரித்ததும், மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து பார்த்து இந்தியர்களை கோபமூட்டினார் மல்லையா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையும் நேரில் பார்த்தார்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி லண்டன் நீதிமன்றத்தில் இந்திய தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், லண்டன் நீதிமன்றம் இன்னும் அவருக்குகால அவகாசம் வழங்கியுள்ளது.
இதனிடையே இன்று மும்பை நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மல்லையாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் 860.92 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு இந்த பணத்தை வாங்குவதாக கூறிவிட்டு மல்லையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இந்த மோசடிக்கு ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலரும் உடந்தை என்பது குற்றச்சாட்டாகும்.