ஐடிபிஐ வங்கி மோசடி.. விசாரணைக்கு ஆஜராக மல்லையாவுக்கு ஏப். 2 வரை அமலாக்கப் பிரிவு "டைம்"!
டெல்லி: ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் விட்டது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி வரை அமலாக்கப் பிரிவு அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக, இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நாட்டை விட்டு ஓடிப் போய் விட்ட மல்லையா, தான் நேரில் ஆஜராக கூடுத்ல் அவகாசம் தேவை என்று கோரியிருந்தார். அதை ஏற்று தற்போது அவகாசம் அளித்துள்ளது அமலாக்கப் பிரிவு.
மல்லையா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் கடந்த ஆண்டு சிபிஐ ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ. 900 கோடியை திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து மல்லையா உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தற்போது பதிவு செய்துள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன இயக்குநர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி ரகுநாதன், ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடன் வழங்கும் அளவையும் தாண்டி அளவுக்கு அதிகமாக மல்லையா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க சில ஐடிபிஐ வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
மல்லையாவுக்கு குண்டக்க மண்டக்க கடன் தருவாங்களாம்.. அதை திரும்ப வசூலிக்க முடியலையே எனறு புலம்புவார்களாம்.. அவர் மீது கேஸ் போடுவாங்களாம். அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓடும் வரை அமைதியா இருப்பாங்களாம்.. அதன் பிறகு சம்மன் அனுப்புவாங்களாம்.. அதற்கு அவர் டைம் கேட்பாராம்.. அதையும் கொடுப்பாங்களாம்.. சூப்பரப்பு!