நடிகர் ஷாருக் கானிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை
மும்பை: " கொல்கத்தா நைட்ரைடர்ஸ்" அணியின் பங்குகளை மொரிஷியஸ் நாட்டில் உள்ள ஒரு கம்பெனிக்கு விற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு, ஷாருக் கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான கேஆர்எஸ்பிஎல் பங்குகள், மொரிஷியஸ் நாட்டில் இயங்கிவரும் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் ஜெய மேத்தாவுக்கு சொந்தமான சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (எஸ்ஐஐஎல்) நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
அவ்வாறு விற்பனை செய்யப்பட்டபோது, பங்குகளின் விலை அப்போதைய சந்தை நிலவரத்தைவிட 8 முதல் 9 மடங்குவரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது ஒரு பங்கின் விலை ரூ.70 முதல் ரூ.86 வரை நிலவிய நிலையில், ரூ.10-க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தின்( FOREIGN EXCHANGE MANAGEMENT ACT ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாகக் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2011-ம் ஆண்டு ஷாருக் கானிடம் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, தெற்கு மும்பையில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் ஷாருக் கானுக்கு சம்மன் அனுப்பினர்.
அதன்படி, விசாரணைக்கு வந்த ஷாருக் கானிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஃபெமா சட்டத்தின் கீழ் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக ஷாருக் கானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததார். பங்கு விற்பனை தொடர்பான சில ஆவணங்களையும் அவர் வழங்கினார் என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த பங்கு பரிவர்த்தனையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், பங்குகள் விற்பனை செய்யப்பட்ட பிறகே அதன் விலை உயர்ந்ததாகவும் நடிகர் ஷாருக் கான் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.