லலித் மோடியை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம்.. பிடிவாரண்ட் கேட்டு கோர்ட்டில் மனு
மும்பை: ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் தருமாறு, அமலாக்கத்துறை சார்பில், மும்பையிலுள்ள நிதி மோசடி சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி ரூ.470 கோடி அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று 2010ம் ஆண்டு, பிசிசிஐ சார்பில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், லலித் மோடியை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் அளிக்க அமலாக்கத்துறை தனது மனுவில் கேட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை, மோடிக்கு, அமலாக்கத்துறை, நினைவூட்டல் கடிதங்களை எழுதி, விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்டும், அவர் வெளிநாட்டிலேயே தொடர்ந்து வசித்துவருகிறார். தனக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதால், இந்தியாவுக்கு வர முடியாது என்று லலித் மோடி கூறிவருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.