ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை?
டெல்லி: ஏர் இந்தியா விமானங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்குகளில் 3 மாதங்களுக்கு மேல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ப. சிதம்பரம்.
தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ப.சிதம்பரத்திடம் ஏர் இந்தியா விமானங்கள் கொள்முதல் முறைகேடு குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 2007-ல் பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த போது ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குகள் பதிவு செய்துள்ளன. இவ்வழக்கு தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.
இன்பத் தகவல்.. தனி நபர் வருமான வரியில் சலுகைகள்.. பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ப. சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவே விமானங்களை வாங்கியது என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று பல மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.