லலித் மோடி மீதான கருப்பு பண வழக்கு: என். சீனிவாசனிடம் வாக்குமூலம் பதிவு!
மும்பை: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மீதான கருப்புப் பண முறைகேடு வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனிடம் அமலாக்கத் துறை நேற்று வாக்குமூலத்தை பதிவு செய்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை வழங்குவது தொடர்பாக மொரீஷியஸ் நாட்டின் வேல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சிங்கப்பூரில் உள்ள மல்டி ஸ்கீரீன் மீடியா இடையே நடந்த பணப் பரிவர்த்தனையில் ரூ.425 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த புகாரின் பேரில் கடந்த 2010-ஆம் ஆண்டில் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை கருப்புப் பண முறைகேட்டு வழக்காக அமலாக்கத் துறை மாற்றம் செய்தது. இவ்வழக்கில்தான் சீனிவாசனிடம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். மும்பையில் சீனிவாசனிடம் சுமார் 3 மணி நேரம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.