சட்டவிரோத பணப் பரிமாற்றம்: லாலு பிரசாத் யாதவ் மீது அமலாக்கத்துறை திடீர் வழக்கு
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது புதியதாக அமலாக்கத்துறை வழக்கு போட்டுள்ளது.
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது அமலாக்கத்துறை இன்று திடீரென புதிய வழக்கு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் லாலு பிரசாத் யாதவை குறி வைத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இந்நிலையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாளம்- நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உறவு முறிக்கப்பட்டது.
இதையடுத்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக புதிய கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது.
தற்போது அடுத்த நடவடிக்கையாக லாலு பிரசாத் யாதவ் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
அண்மையில்தான் லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது ஓட்டல்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.