2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: தயாளு அம்மாள் மனு ஜூலை 2க்கு ஒத்திவைப்பு
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடாக 200 கோடி ரூபாய் நிதி பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை 19 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்றது.
அப்போது தயாளு அம்மாள், கரிம் உராணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சம்மதித்த அமலாக்கத்துறை கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
தயாளு அம்மாள் மனு
இந்நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மறதிநோய் தாக்குதல்
இதில் அல்சிமர் என்ற மறதி நோய், முதுமை, மோசமான உடல்நலன் உள்ளிட்ட பிரச்னைகளால் நெருங்கிய உறவுகளைத் தவிர வேறு யாரையும் தயாளு அம்மாவால் அடையாளம் காண முடியாது என்பதால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
உடல் பரிசோதனை அறிக்கை
ஏற்கெனவே தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவக் குழு தங்களது அறிக்கையை சமர்பித்துள்ளது எனவும், அவரது உடல் நிலையை எந்த மருத்துவக் குழுவை வேண்டுமானாலும் வைத்து பரிசோதித்துக் கொள்ளலாம் எனவும் வாதிடப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை பரிசோதனை
சென்னையில் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, பெங்களூரு அல்லது எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யலாம் என பரிந்துரை அளித்துள்ளது.