நீரவ் மோடி வீட்டில் சோதனை... ரூ. 26 கோடி மதிப்பிலான நகை, கடிகாரங்கள் சிக்கின!
தொழிலதிபர் நீரவ் மோடியின் வீட்டில் இருந்து விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 26 கோடி மதிப்பிலான நகை மற்றும் கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
நீரவ் மோடி இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கடந்த மார்ச் 22ம் தேதி மும்பை வொர்லியில் உள்ள நீரவ் மோடியில் சமுத்ர மஹாலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூ. 15 கோடி மதிப்பிலான ஆன்டிக் நகைகள், ரூ. 1.4 கோடி மதிப்பிலான விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள், ரூ. 10 கோடி மதிப்பிலான பெயின்ட்டிங்குகள் கைப்பற்றப்பட்டன.
இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளில் ஒரே ஒரு வைர மோதிரத்தின் விலை மட்டுமே ரூ. 10 கோடி. வங்கியை மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது 2 மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் நீரவ் மோடி, அவருடைய உறவினர் மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனர் மெகுல் சோக்ஸி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
நீரவ் மோடி உள்ளிட்ட 2 பேர் மீது இன்டர்போலிடம் தகவல் கோரியுள்ளது அமலாக்கத்துறை. வங்கியை மோசடி செய்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியதால் அவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நீரவ் மோடிக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள், வைரம், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சேர்த்து ரூ. 7,638 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.