விஜய் மல்லையா கடன் விவகாரம்: ஐடிபிஐ வங்கி முன்னாள் தலைவருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
டெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு கடன்களை வாங்கி அதை திருப்பி கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்தது குறித்து ஐடிபிஐ வங்கியின் முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வாலுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனிடையே ஜி.எம்.ஆர். ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பணம் செலுத்த வேண்டிய வழக்கில் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அத்துடன் செக் மோசடி வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு எதிராக 5 பிடிவாரண்ட்டுகளை பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஐடிபிஐ வங்கி ரூ900 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதேபோல் விஜய் மல்லையாவும் ஐடிபிஐ வங்கி கடன் விவகாரம் தொடர்பாக வரும் 18-ந் தேதி மும்பையில் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.