லலித் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்: சி.பி.ஐ.க்கு அமலாக்கப் பிரிவு கடிதம்!
டெல்லி: நிதி மோசடி வழக்குகளில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு சர்வதேச போலீஸான இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ.க்கு அமலாக்கப் பிரிவு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அமலாக்கத் துறையின் மும்பை மண்டல அலுவலகத்தில் தற்போது லலித் மோடிக்கு எதிராக அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐ.பி.எல். நிதியில் முறைகேடு செய்து அதைத் தவறாகப் பயன்படுத்தியதாக லலித் மோடிக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த இரு வழக்குகளை மத்திய அமலாக்கத் துறை பதிவு செய்தது.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகும்படி லலித் மோடிக்கு பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது. ஆனால் லலித் மோடியோ இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் நாட்டை விட்டு தப்பி லண்டனுக்கு நீண்ட கால தொழில்முறை விசாவில் சென்று குடியேறினார்.
இதனால் அவருக்கு எதிரான வழக்குகளை அமலாக்கத் துறையால் தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை. இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள போலீஸ், சர்வதேச போலீசான இண்டர்போல் உதவியுடன் அவரது இருப்பிடம், அடையாளம் போன்ற தகவல்களைக் கண்டறியும் வகையில் முதல் கட்டமாக ப்ளூ கார்னர் நோட்டீஸ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த நோட்டீசைப் பெற்ற போதும் லலித் மோடி, தொழில் முறை விசாவில் வந்த தனது பாஸ்போர்ட்ட்டை இந்திய அரசு சட்டவிரோதமாக முடக்கியுள்ளது எனக் கூறி, பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கு முடியும் வரை பிரிட்டனில் லலித் மோடி தங்கியிருக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் லலித் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வழக்குகள் பற்றி விவரங்களைச் சேகரித்து அவற்றின் குற்றத்தன்மையின் அடிப்படையில் அவரை லண்டனில் கைது செய்து நாடு கடத்த வகை செய்யும் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட மத்திய அமலாக்கத் துறை நிதி அமைச்சகத்துக்கு அண்மையில் பரிந்துரைத்திருந்தது.
ஒரு நாட்டில் குற்றம் இழைத்து விட்டு வேறு நாட்டில் தஞ்சம் அடைந்த ஒருவரைக் கைது செய்யவோ, அல்லது நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்தால் அவரைப் பிடித்து ஒப்படைக்கவோ, இண்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு ஏதுவாக லலித் மோடிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்புவதற்காக தற்போது முறைப்படி சி.பி.ஐ.க்கும் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
இதன்படி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால் லண்டனில் உள்ள லலித் மோடியை கைது செய்து நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும்.
இதனால் வெளிநாட்டில் இருந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த லலித் மோடியின் கேம் முடிவடைய காத்திருக்கிறது...