மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சேலத்தில் ராணுவ தளவாட ஆலை.. மோடியிடம் எடப்பாடி வலியுறுத்தியது என்ன?
Recommended Video
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதன்பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும்.
[ஜெ.வுக்கு பாரதரத்னா விருது வழங்குங்க.. மோடியைச் சந்தித்து முதல்வர் கோரிக்கை]
மேகதாது
கர்நாடக அரசின் மேகதாது நீர் தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன். காவிரியில் அணை கட்ட அது தொடர்பான மற்ற மாநிலங்களின் சம்மதத்தை பெற்றாக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளேன். காவிரி மறுவாழ்வு திட்டத்ததிற்கு புதிய அனுமதி வழங்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக்ஸ் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் அதே தொகையை வழங்க வசதியாக நிலுவை தொகையை வழங்க கேட்டுக்கொண்டேன்.
மருத்துவ கல்லூரி
ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் திட்டங்களின் நிலை குறித்து தெரிவித்து நிலுவை நிதியை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்.
கன்னியாகுமரி, சேலம்
மீனவர்கள் மீட்பு பணிக்கு குமரியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
|
இடைத் தேர்தல்
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.