டெல்லிக்கு வந்து 'ஹேக்கிங்' அறிவை 'டெவலப்' செய்த அமெரிக்க ஸ்னோடன்...!
பெங்களூர்: அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டி விட்டு அங்கிருந்து தப்பிப் போய் விட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி காண்டிராக்டர், எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்க ராணுவ கம்ப்யூட்டர்களை ஹேக் செய்வது குறித்த அறிவை இந்தியாவுக்கு வந்து மேம்படுத்திக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையை அதிர வைத்தவர் ஸ்னோடன். அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் ஆத்திரப் பார்வையை வீசக் காரணமாக இருந்தவரும் இந்த ஸ்னோடன்தான்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் முன்பு காண்டிராக்டராக இருந்தவர் இந்த ஸ்னோடன். தற்போது ரஷ்யாவுக்குத் தப்பியோடி தங்கியிருக்கிறார். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தி அமெரிக்கா அரசையும், அதன் உளவு அமைப்பையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ஸ்னோடன், கம்ப்யூட்டர்களை ஹேக் செய்வது குறித்த அறிவை இந்தியாவில் வைத்து பெற்றுள்ளார் என்பது சுவாரஸ்யமானது.
டெல்லியில் ஒரு வாரம்
டெல்லியில் ஒரு வாரம் தங்கி அங்கு கோர் ஜாவா புரோகிராமிங் படித்துள்ளார் ஸ்னோடன். மேலும் ஹேக்கிங்கை எப்படித் திறம்படச் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டுள்ளார்.
மோத்திநகர் சென்டரில்...
டெல்லி மோத்திநகரில் உள்ள கோனிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில்தான் கடந்த 2010ம் ஆண்டு பயி்ற்சி பெற்றுள்ளார் ஸ்னோடன்.
ஜப்பானிலிருந்து டெல்லிக்கு
அந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார் ஸ்னோடன். பின்னர் செப்டம்பர் 9ம் தேதி அவர் அமெரிக்கா திரும்பியுள்ளார்.
2000 டாலர் கட்டணம்
இந்தப் பயிற்சி வகுப்புக்காக 2000 டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார் ஸ்னோடன். இதில் பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், சாப்பாடு ஆகியவையும் அடக்கமாகும் என்று கோனிங் சொல்யூன்ஸ் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ரோஹித் அகர்வால் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட்டின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம்
மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஆரக்கிள், இசி கவுன்சில், சிட்ரிக்ஸ், விஎம்வேர் ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம்தான் இந்த கோனிங் சொல்யூஷன்ஸ்.
வெளிநாட்டவர்களுக்கு பயிற்சி
இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 5 கிளைகள் உள்ளன. துபாயிலும் ஒரு கிளை உள்ளது. இவற்றின் மூலம் இதுவரை 20,000 வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இவர்கள் பயிற்சி அளித்துள்ளனராம்.
பாதுகாப்புத் துறையினருக்கான 4 நாள் பயிற்சி
வழக்கமாக இந்த மையத்தில் பாதுகாப்புத் துறையினருக்கு சிறப்பு பயி்ற்சி அளிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் ஸ்னோடனும் பயிற்சிக்கு வந்து போயுள்ளார். இது நான்கு நாள் பயிற்சியாகும்.
ஹேக்கிங் தொடர்பான சிறப்புப் பயிற்சி
உண்மையில் இங்கு ஹேக்கிங்கை எப்படி சமாளிப்பது, தடுப்பது, கம்ப்யூட்டர்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பயிற்சி தரப்படுகிறது. ஆனால் அதை ஸ்னோடன் வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டு விட்டார்.
படு வேகமாக கற்றுக் கொண்டாராம்
ஹேக்கிங்கில் ஏற்கனவே நல்ல நிபுணத்துவம் கொண்டவராம் ஸ்னோடன். இங்கு பயிற்சிக்கு வந்தபோது சொல்லிக் கொடுக்கப்பட்டதை படு வேகமாக கிரகித்துக் கொண்டார் என்றும் ரோஹித் சொல்கிறார்.
இமெயிலில் விசாரித்து வந்தார்
இந்த பயிற்சி வகுப்புக்கு வருவதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி இந்த நிறுவனத்திற்கு ஜப்பானிலிருந்து இமெயில் அனுப்பி ஹேக்கிங் பயிற்சி குறித்து விசாரித்துள்ளார் ஸ்னோடன். அதன் பிறகுதான் இவர் இந்த மையத்தைத் தேர்வு செய்தாராம்.
செளரப் சர்மா
ஸ்னோடனுக்கு ஹேக்கிங் பயிற்சி கொடுத்தவர் பெயர் செளரப் சர்மா. இவர் இப்போது கோனிங்கில் வேலை பார்க்கவில்லை. ராஜினாமா செய்து விட்டு வேறு கம்பெனியில் சேர்ந்து விட்டாராம்.