ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருக்கு ஆபத்து? - துர்நாற்றம் வருவதால் சந்தேகம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 4வயது குழந்தையை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தின் நாகத்தானா கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த் பாட்டீல் மகள் அக்ஷதா (4). சிறுமியின் தந்தையும், தாயும் கூலி வேலை செய்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை இரவு, அக்ஷதா போர்வெல் கிணறு அமைக்கப்பட்டுவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் ஒன்று அவளை துரத்தியதாக கூறப்படுகிறது. நாய்க்கு பயந்து அக்ஷயா அங்குமிங்கும் ஓடியபோது, திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டாள். இதையறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நேற்றுமுன்தினம் இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
300 அடி தோண்டியும் தண்ணீர்வராததால் இந்த போர்வெல்லை தோட்ட உரிமையாளர் மூட முயற்சி செய்துள்ளார். அதில் 60 அடி ஆழம்வரை மூடப்பட்டுள்ளது. இதில்தான் சிறுமி விழுந்துள்ளாள். ஆனால் 28 முதல் 30 அடி ஆழத்தில், நடுவேயிருந்த மண், மரக்கட்டைகளில் சிக்கி குழந்தை அடி ஆழம்வரை போகவில்லை என்று கூறப்படுகிறது. எனவே போர்வெல் அருகே சுமார் 35 அடி ஆழத்தில் மற்றொரு குழி தோண்டி குழந்தை அதன்வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புனேயிலிருந்து தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளும் அங்கு குழுமியுள்ளனர்.
சிறுமிக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் ரோபோ உதவியுடன், குழந்தையை பத்திரமாக மீட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கு மீட்பு படையினர் தகவல் கொடுத்து பிஜாப்பூர் வருமாறு கேட்டுக்கொண்டனர். ரோபோவுடன் வந்த மணிகண்டன் நேற்று மாலை முதல் மீட்பு நடவடிக்கையை தொடங்கினார். அதிநவீன காமிராக்களை போர்வெல் உள்ளே விட்டு குழந்தையின் நிலைமையை கண்காணித்தார். அதன்பிறகு ரோபோ கருவியை போர்வெல்லுக்குள் விட்டு குழந்தையை ரோபோவின் கரங்களை வைத்து கவ்வி பிடிக்க வைக்க முயன்றார். ஆனால் ரோபோவின் கரங்களில் மணல் கவ்வப்பட்டது. இதற்கு காரணம் குழந்தை விழுந்ததற்கு பிறகு அவள் மீது மணல் விழுந்துள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
குழந்தை விழுந்ததும் வேடிக்கை பார்க்கவும், ஆர்வத்திலும் ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் முண்டியடித்து பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்கள் காலில் பட்ட மணல் போர்வெல்லுக்குள் விழுந்து குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: புதன்கிழமை காலையில் மதுரையில் இருந்து கிளம்பி பெங்களூர் வந்தேன். அங்கிருந்து மாலையில் ஹெலிகாப்டர் மூலம் பிஜாப்பூர் அழைத்துவரப்பட்டேன்.
குழந்தையின் மீது மணல் விழுந்திருப்பதால்தான் ரோபோவால் கவ்வி பிடிக்க முடியவில்லை. எனவே வேக்கம் கிளினரை வைத்து மணலை உறிஞ்சினோம். ஆனால் சாந்துபோட்டதை போல மணல் மிகவும் கட்டியாக உள்ளது. இந்த பகுதியின் மணல் தன்மை அப்படிதான் இருக்குமாம். எனவேதான் ரோபோவின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரோபோவுக்கு மாற்றாக, ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் தோண்டி அங்கிருந்து சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாறை பகுதியாக இருப்பதால் சுரங்கம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. இன்று மதியத்திற்குள் சுரங்கம் அமைக்கப்பட்டு குழந்தையை நெருங்கிவிடலாம் என்று நம்புகிறோம். இவ்வாறு மணிகண்டன் தெரிவித்தார். இதனிடையே இன்று மாலை 6 மணியளவில் குழந்தை அருகேவரை சுரங்க பாதை துவாரம் போடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மீட்பு படை வீரர்கள் குழிக்குள் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளனர். அக்ஷதா இறந்துபோய் அவளது உடலில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
40 மணி நேரங்களுக்கும் மேலாக குழிக்குள் இருந்ததால் பிராணவாயு கிடைக்காமலும், பசியாலும் அக்ஷதா இறந்திருக்கலாம் என்று மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர். இருப்பினும் அதிசயத்தை எதிர்நோக்கி மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது.