'பிரஸ் மீட்டில்' கெஜ்ரிவால் கட்சி தலைவர் மீது முட்டை வீச்சு
லக்னோ: லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சைஃப் ஜாப்ரி என்ற வாலிபர் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டே குமார் மீது முட்டையை வீசினார். இதையடுத்து அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் சைஃபை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னாரைச் சேர்ந்த சைஃப் முலாயம் இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. குமார் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தான் அவரை தாக்கியதாக சைஃப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குமார் போலீசில் புகார் கொடுக்காததால் சைஃப் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து குமார் கூறுகையில்,
இது போன்ற தாக்குதல்களால் தளர்ந்துவிட மாட்டோம். மாறாக அரசியலின் முகத்தை மாற்ற மேலும் வலுவோடு செயல்படுவோம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியைப் பார்த்து பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆடிப் போயுள்ளது. லோக் சபா தேர்தலில் அனைத்து கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராக வலுவான போட்டியாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தும் என்றார்.