சிரஞ்சீவி மீது சரமாரி முட்டை வீச்சு- மோடியை ஹிட்லர் என்றதால் கொந்தளிப்பு!!
ஹைதராபாத்: தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை தாக்கிப் பேசியதால், நடிகர் சிரஞ்சீவி மீது சரமாரியாக முட்டைகள் வீசப்பட்டன. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடிகரும், மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மோடி தனது சுயநலத்துக்காக கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஒரங்கட்டியவர். அவர் ஒரு கொடுன்கோலன் என்றும், ஹிட்லர் என்றும் சிரஞ்சீவி அடுக்கடுக்காக மோடியை விமர்சித்தார்.
தொடர்ந்து அவர், மோடி பிரதமரானால், தொழிலதிபர்கள்தான் இந்த நாட்டை ஆட்சி செய்வர். சாதாரண மக்களுக்கு எந்த இடமும் இல்லை என்று கூறினார்.
மோடியுடன் சந்திரபாபு நாயுடு எப்படி கூட்டு சேர்ந்தார்? கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ.க மீது குற்றம் சுமத்தி தே.ஜ கூட்டணியில் இருந்து விலகியவர்தான் இந்த சந்திரபாபு நாயுடு. பா.ஜ.கவுடன் கூட்டு வைத்தது வரலாற்று பிழை என்றார். தற்போது பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் என்று பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் சிரஞ்சீவி மீது முட்டைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைகுலைந்துப் போன அவர் சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தி விட்டு மவுனம் காத்தார்.
அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும் அவர் தொடர்ந்து பேசி விட்டு அங்கிருந்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.