”ஒரு லட்சம் குடுத்தா 8 லட்சம்... 8 லட்சம்” – ஆன்லைன் பிராடுகளுக்கு வலைவீச்சு
பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த ஒருவரிடம், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் கொடுத்தால் ஒரே வருடத்தில் எட்டு லட்சமாக திருப்பி தருவதாகக் கூறி பண மோசடி செய்ய முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராஜி நகரை சேர்ந்தவர் ராகேஷ். இவரிடம் கன்னியாகுமரி மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ஒரே ஆண்டில் எட்டு லட்ச ரூபாய் திருப்பித்தருவதாக ஆன்லைனில் தகவல் தெரிவித்திருந்தார்.
இதை நம்பிய ராகேஷ் ஆன்லைனில் இருந்த மொபைல் போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செந்தில் இரண்டு லட்ச ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணகிரிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். ராகேஷ் பணத்தை எடுத்து கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்ததும் செந்திலிடம் போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது செந்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் சுந்தர் என்பவர் வருவார் அவரிடம் நீங்கள் பணத்தை கொடுத்து விடவும் என்று கூறியுள்ளார்.
செந்தில் கூறியது போலவே அங்கு வந்த சுந்தர் உடனடியாக இரண்டு லட்சம் பணத்தை உடனடியாக தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செந்தில், சுந்தர் இருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ராகேஷ் ஏற்கனவே போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
நிகழ்விடத்துக்கு வந்த எஸ்.ஐ மதனலோகன் பணம் வாங்க வந்த சுந்தரை பிடித்து விசாரித்தார். விசாரணையில் அந்த கும்பல் ஆன் லைன் மூலமாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்ய முயன்று வரும் கும்பல் எனத் தெரியவந்தது. இதையடுத்து சுந்தரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செந்திலை போலீஸார் தேடி வருகின்றனர்.