காஷ்மீரில் பெரும் பனிச்சரிவு.. 8 ராணுவ வீரர்கள் சிக்கி தவிப்பு.. மீட்பு பணி தீவிரம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
வடக்கு க்ளாசியர் என்ற பகுதி சுமார் 18,000 அடி உயரமானது. இங்கு வடக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகே திடீரென இன்று மதியம் 3 மணியளவில், பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால், எதிர்பாராதவிதமாக, 8 ராணுவ வீரர்கள் பனிச்சரிவிற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக, ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரிக்குக் கீழே வெப்பநிலை நிலவ கூடிய பகுதி இதுவாகும். பனியின் கீழ் சிக்கியுள்ள ராணுவத்தினரை மீட்கும் பணி என்பது இங்கு பெரும் சவாலானது.
இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்த பகுதி உலகின் உயரமான போர்க்களம் என வர்ணிக்கப்படுகிறது. 1984 முதல், வானிலை மாற்றத்தால், இரு நாடுகளை சேர்ந்த பல ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர்.
2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், க்ளாசியர் பகுதியில், ஏற்பட்ட பனிச்சரிவால், 10 ராணுவ வீரர்கள், உயிரிழந்தனர். லேன்ஸ் நாயக், ஹனுமந்தப்பா கொப்பாட், 25 அடி, ஆழமுள்ள பனியில் சிக்கி மூழ்கியிருந்தார். 6 நாட்கள் கழித்து அவர் உயிரோடு மீட்கப்பட்டபோதிலும், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, ஹனுமந்தப்பா கொப்பாட் உயிரிழந்தார்.