மதுரை, திருப்பதி ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ வாட்டர்: லோக்சபாவில் தகவல்
டெல்லி: மதுரை, திருப்பதி உள்ளிட்ட நாட்டின் 8 ரயில் நிலையங்களில் சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று லோக்சபாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்வியொன்றுக்கு பதிலளித்து மனோஜ் சின்கா கூறியுள்ளதாவது: ரயில் நிலையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறதா என்பதை ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து பார்த்து வருகின்றனர். சுத்தமான குடிநீரை அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் வினியோகத்தை ரயில் நிலையங்களில் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, மதுரை, திருப்பதி, பாட்னா, ஹஸ்ராத் நிஜாமுதீன், குவகாத்தி, கதக், துவுரகா, போபால் ஆகிய 8 ரயில் நிலையங்களில் ஆர்ஓ வாட்டர் சப்ளை செய்யப்படும். வெள்ளோட்ட அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதன் வெற்றியை பார்த்து பிற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ரயில் நிலையங்களில் கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படக் கூடாது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.15க்கு மிகாமல்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்ப்டடுள்ளது. ரயில் நீர் என்ற பெயரில் ரயில்வே துறையும் குறைந்த விலையில் மினரல் வாட்டர் பாட்டில்களை சப்ளை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.