மலைபோல ஆவணங்களை குவித்துவிட்ட அதிமுக கோஷ்டிகள்.. படித்து பார்க்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறல்
டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் அதிமுகவின் பிரமாணப் பத்திரங்களை அதிகாரிகள் எப்படி படிப்பார்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டிபோட்டு மூன்று கோஷ்டியும் டன் கணக்கில் குவித்திருக்கும் பிரமாணப்பத்திரங்களை தேர்தல் ஆணையம் எப்படி படித்து முடிக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும், சசிகலா, தினகரன் கோஷ்டியும் இரட்டை இலை சின்னத்திற்கும் அதிமுக பெயருக்கும் அடித்துக் கொண்டன. இதனால் தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி சின்னத்தையும் கட்சியின் பெயரையும் முடக்குவதாக அறிவித்தது.
இதனையடுத்து இரண்டு கோஷ்டியும் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று தேர்தல் ஆணைய அனுமதியுடன் அறிவித்துக் கொண்டன. இந்நிலையில் இரு அணியினரும் அதிமுக பெயரை பயன்படுத்துவதற்கு உரிமை கோரும் ஆவணங்களை ஜூன் 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
லாரியில் கொண்டு சென்ற பிரமாணப் பத்திரம்
இதனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்து லட்சக்கணக்கான அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரமாணப் பத்தரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்றோடு அந்த அணியினர் 3 லட்சத்து 84 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
போட்டிக்கு 7 லட்சம் பத்திரங்கள்
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிக்கு போட்டியாக சசிகலா, டிடிவி. தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த முதல்வர் பழனிசாமி அணியும் 6 லட்சத்து 82 ஆயிரத்து 805 பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
நான் தான் இருக்கன்ல தீபா
இந்த இரண்டு கோஷ்டிக்கு மத்தியில் ஜெ. தீபாவும் அதிமுக, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணைய வரலாற்றிலேயே முதல்முறையாக லாரி லாரியாக பிராமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
எப்படி படிப்பது?
இது மட்டுமல்ல மலை போல் குவிந்து கிடக்கும் இந்தப் பிரமாணப் பத்திரங்கள் வைப்பதற்காக தனி அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரமாணப் பத்திரங்களை குழுவாக அதிகாரிகள் அமைத்து சரிபார்ப்பதா அல்லது என்ன உத்தியை கையாள்வது என்று தேர்தல் ஆணையம் விரைவில் உயரமட்ட அதிகாரிகளுடன் கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.
விசாரணை
இந்த ஆலோசனையின் முடிவுபடி பிரமாணப்பத்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னரே விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல விசாரணைக்கு இரு அணியையும் அழைப்பதா, அல்லது தீபாவையும் சேர்த்து அழைப்பதா என்றும் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.