"மதுசூதனன் அணி".. டெக்னிக்கலாக புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!
இரட்டை இலைச்சின்னத்தை மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக அறிவித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளது சுவாரசியத்தைக் கொடுத்துள்ளது.
Recommended Video
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு ஒரு கெத்து கூடியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராகி கட்சியை கைப்பற்றிய சசிகலா, முதல்வராகி ஆட்சியை கைப்பற்ற எண்ணினார். இதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருந்ததால் அவரை முதல்வர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்து வைத்து அரியணையில் அமர நாள் குறித்தார் சசிகலா.
பொறுத்தது போதும் என வெகுண்டெழுந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து ஓவர் நைட்டில் சசிகலாவுக்கு எதிராக மாறினார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, மதுசூதனன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டட பலர் ஆதரவு தெரிவிக்க தைரியமாக கட்சியை கைப்பற்றும் பணியில் இறங்கியது ஓபிஎஸ் அணி.
பிள்ளையார் சுழிபோட்ட ஓபிஎஸ்
மதுசூதனன் தலைமையில் எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் , கேபி முனுசாமி உள்ளிட்டோர் கட்சி தங்களுக்கே சொந்தம் மனுத்தாக்கல் செய்து இரட்டை இலையை பெற பிள்ளையார் சுழிபோட்டனர். அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகள் நீடிக்காத சசிகலா பொதுச்செயலாளரானது செல்லாது என்றும் வாதிட்டனர்.
திஹார் சிறையில் டிடிவி
பாயின்ட் டூ பாயின்ட் ஓபிஎஸ் அணி எடுத்து வைத்த வாதங்களால் அவர்களுக்கே இரட்டை இலைச்சின்னம் வழங்கப்படும் என கூறிப்பட்டது. இந்த நிலையில் இரட்டை இலைச்சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் டிடிவி தினகரன்.
நீக்கப்பட்ட சசி தினகரன்
இனியும் அவரை கட்சியில் வைத்திருந்தால் முதலுக்கே மோசம் என்று எண்ணிய எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கியது. மேலும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டு சேர்ந்த எடப்பாடி அணி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதோடு அதனை தேர்தல் ஆணையத்திலும் தாக்கல் செய்தது.
துரித விசாரணை
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பும் தினகரன் தரப்பும் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்தியது தேர்தல் ஆணையம்.
மதுசூதனன் அணிக்கு..
இந்நிலையில் இந்த வழக்கில் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அதிகாப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 83 பக்கங்களை கொண்ட தீர்ப்பில் தேர்தல் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
எடப்பாடியாருக்கு செக்
ஓபிஎஸ்- ஈபிஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் மதுசூதனன் அணிக்கு இரட்டை இலைச்சின்னம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது எடப்பாடியாருக்கு வைக்கப்பட்ட செக்காகவே கருதப்படுகிறது. இதன்மூலம் இரட்டை இலை வழக்கில் வென்றது ஓபிஎஸ் அணிதான் என்றும் நிருபணம் ஆகியுள்ளது.
இணைத்து வைத்த மேலிடம்
ஏற்கனவே டெல்லி மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விடவும் ஓ.பன்னீர் செல்வத்திடமே அதிக நெருக்கம் காட்டி வந்தது. இரட்டை இலை சின்னத்தை வழங்கவே டெல்லி மேலிடம் இரு அணிகளையும் இணைத்து வைத்ததாக கூறப்பட்டது.
ஓபிஎஸ் பிடியில் கட்சி
இந்நிலையில் கட்சியின் பிடி ஓபிஎஸ் கையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்ற ஓபிஎஸ், கட்சியின் தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.