5 மாநில தேர்தல்: வேட்பாளர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த தேர்தல் கமிஷன் கோரிக்கை
5 மாநில தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: வங்கிகளில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வேட்பாளர்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த பிறகு வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வங்கி மற்றும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த வரம்பை இன்னும் உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு தான் உயர்த்தப்படும் என்று ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் தொடங்குகிறது. வங்கிகளில் இருந்து வாரம் ரூ.24,000 தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன், உத்தரப்பிரதேசம். உத்ரகாண்ட், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.28 லட்சமும், கோவா மற்றும் மணிப்பூர் வேட்பாளர்கள் ரூ.20 லட்சம் வரையிலும் தேர்தலுக்கு செலவிடலாம்.
இந்நிலையில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வேட்பாளர்களுக்கான பணம் எடுக்கும் உச்ச வரம்பை வாரம் ரூ.24000த்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இதற்காக போட்டியிடும் நபர் தான் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்பித்தால் இந்த தொகையை அனுமதிக்கலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.