ரத்தாகிறதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்? நாளை தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை !
ஆர்.கே நகர் இடை தேர்தல் நடத்துவது குறித்து நாளை தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது குறித்த புகார் அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறையினர் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து நாளை தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கு பின்னர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் திங்கட்கிழமையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் தாங்கள் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தகிடு தத்தோம் வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டார். ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் நேற்று ஐடி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு அலுவலகங்களில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணங்களையும் ஐடி துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து திங்கட்கிழமை டெல்லியில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஆலோசனை நடத்துகிறது. இதில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா மற்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தேர்தல் ஆணையரின் ஆலேசானைக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.