இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு வண்டி வண்டியாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தினகரன் தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.