ஆர்கே நகர் தொகுதியில் முறைகேடு புகார்… டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த விரிவாக ஆலோசிக்க டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
டெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக உயரதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 12ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
விறு விறு பிரச்சாரம்
வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் விறு விறுப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கரகாட்டம், குத்தாட்டம், ஆடல், பாடல், ரெக்கார்ட் டான்ஸ் என களைகட்டியுள்ளது ஆர் கே நகர் தொகுதி.
பணப்பட்டுவாடா
இந்த பரபரப்பு பிரச்சாரத்திற்கு இடையே தங்களது கட்சி வேட்பாளர் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பதற்றத்தில் பணப்பட்டுவாடா அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. அப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
இதனிடையே தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அழைப்பு
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருமானவரித்துறை இயக்குநர், உள்துறைசெயலாளர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.
வீடியோ கான்பிரன்சிங்
வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்சனை பிரதானமாக அலசப்பட்டு வருகிறது. அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.