முசாபர்நகர் கலவரம் பற்றிய பேச்சு- ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிட்டு குற்றம் சாட்டி பேசினார்.
ராகுலின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று, கடும் கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா தலைவர்கள், அது குறித்து உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கூறி இருந்தனர். பின்னர் 5 பேர் கொண்ட பாரதிய ஜனதா குழுவினர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்தை சந்தித்து அவரிடமும் ராகுலின் பேச்சு குறித்து புகார் கூறினர்.
இதைத் தொடர்ந்து தற்போது முசாபர்நகர் கலவரம் பேச்சு தொடர்பாக பதில் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 4ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ராகுலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.