மீண்டும் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்.. ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்றும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்றும் அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. காலியான தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் அதிமுகவின் இரு அணிகள், திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தன. அதிமுக சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
சிக்கிய ஆவணங்கள்
ஆனால் ஆர் கே நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
சேர்த்த நடத்த முடிவு?
இதைத்தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
குஜராத் மட்டும் அறிவிப்பு
இந்நிலையில் இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேதியை மட்டுமே அதன்படி தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
அப்போதும் இல்லை
ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அண்மையில் அருணாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் அறிவிப்பின் போது ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் ஏமாற்றம்
ஆனால் அப்போது அறிவிக்கப்படாடததால் இன்று நிச்சயம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் அதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.