மதுசூதனனால் ஓ.பி.எஸ் அணிக்கு பின்னடைவு.. மாற்றி, மாற்றி பேசுவதாக சீறிய தேர்தல் ஆணையம்
டெல்லி: மாற்றி, மாற்றி பேசுவதாக ஓ.பி.எஸ் தரப்பு மூத்த அதிமுக நிர்வாகியான மதுசூதனனுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது மத்திய தேர்தல் ஆணையம்.
தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி முன்னிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாத-விவாதங்கள் நடந்து வருகின்றது.
உணவு இடைவேளைக்கு பிறகு நடந்த வாதத்தின்போது, மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் சரமாரி கேள்விகளை முன் வைத்தது.
முரண்பட்ட தகவல்
சசி நியமனம் குறித்து முரண்பட்ட தகவல்களை தந்தது ஏன்? தேர்தல் ஆணையத்திலும், உயர்நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை அவர் கொடுத்துள்ளார் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
ஹைகோர்ட்டில் கூறியது
சசிகலா அணியில் இருந்தபோது அவரை ஆதரித்து, விதிகளுக்கு உட்படே சசிகலா நியமனம் செய்யப்பட்டார் என மதுசூதனன் சென்னை ஹைகோர்ட்டில் கூறியிருந்தார். ஒவ்வொரு உறுப்பினரையும் கேட்டு பொதுச்செயலரை நியமிக்க கட்சியில் விதி இல்லை என்றும், நிர்வாகிகளின் கருத்து அடிப்படையில் பொதுச்செயலர் தேர்வு செய்யப்படலாம் என்றும், மதுசூதனன் கூறியிருந்தார். இப்போது அவர் சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளார்.
தப்பை உணர்ந்துவிட்டார்
இதைத்தான் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி கேட்டது. ஆனால், மதுசூதனனுக்கு முன்பு சட்ட நிபுணர் குழு தவறாக வழிகாட்டிவிட்டதாகவும், இதை உணர்ந்துதான், அவர் சசிகலா அணியிலிருந்து வெளியேறினார் எனவும், ஓ.பி.எஸ் தரப்பில் விளக்கம் கூறினர்.
ஆவணங்களில் சந்தேகம்
இருப்பினும், தனக்கு அதிகப்படியானோர் ஆதரவு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய தகவல்கள், ஆவணங்களில் தேர்தல் ஆணையத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த கேள்விகளை தேர்தல் ஆணையம் எழுப்பியது. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் ஜோடிக்கப்பட்டது என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.