''சாரி.. அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை'- திரிணாமுல் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்
கொல்கத்தா: கடைசி மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இதனிடையே இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே மேற்கு வங்கத்திலும் கொரோனா பரவலும் தற்போது உச்சமடைந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளனர்.
அடுத்து மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. இதை வலியுறுத்தி பாஜகவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், திரிணாமுல் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடுகையில் தேர்தலுக்கான காலம் 11 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு மையங்கள் 32% அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில், "கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே மாலை 7 - இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே தங்கள் பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம். அடுத்த நடைபெற வேண்டிய மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளது.