பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து.. தேர்தல் ஆணையம்
Recommended Video
புவனேஸ்வர்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தனி ஹெலிகாப்டரில் ஒடிசாவின் சாம்பல்பூர் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தார்.
அங்கு தேர்தல் பார்வையாளராக கர்நாடகவைச் சேர்ந்த 1996ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான முகமது மொஷின் நியமிக்கப்பட்டு இருந்தார்.
பாதுகாப்பில் குளறுபடி
தேர்தல் அதிகாரி முகமது மொஷின், பிரதமர் மோடி வந்திறங்கிய ஹெலிகாப்டரை 15 நிமிடம் சோதனை நடத்தினார். இதனால் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் குற்றம்சாட்டினார். இதன்காரணமாக கீழ்ப்படியாமை மற்றும் கடமை தவறியதாக குற்றம்சாட்டி முகமது மொஷினை கடந்த ஏப்ரல் 17ம் தேதி தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது.
சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்போது தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்கையில், தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு சோதனையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக 10.4. 2014ல் வெளியிட்டப்பட்ட அறிவிப்பை மேற்கொள்காட்டினார். இதனிடையே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை சோதிக்க கூடாது என்று எதுவும் இல்லை. தேர்தலில் சோதனை என்றால் எல்லாருக்கும் ஒன்றுதான் என குற்றம்சாட்டின.
தீர்ப்பாயம் உத்தரவு
இதை எதிர்த்து ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஷின் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நிர்வாக தீர்ப்பாயம், தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளவர்களை சோதிக்கக்கூடாது என்று எந்த உத்தரவும் இல்லை. கர்நாடக முதல்வர், ஒடிசா முதல்வர் ஆகியோரது வாகனங்கள் கூட தேர்தல் பார்வையாளர்களால் சோதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் தடை
எனவே தேர்தல் பார்வையாளர் முகமது மொஷினை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
சஸ்பெண்ட் ரத்து
இதையடுத்து நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் தேர்தல் ஆணையம் ஐஏஎஸ் அதிகாரி முகமது மொஷினை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.