தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகளுக்கு இனி லட்சங்களில் சம்பளம்! யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு தெரியுமா?
டெல்லி: மூன்று தேர்தல் ஆணையர்கள் சம்பளம் வரவிருக்கும் வாரங்களில் இரண்டு மடங்கு உயர உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் உள்பட மூன்று ஆணையர்கள், "உச்சநீதிமன்ற நீதிபதியின் சம்பளத்திற்கு சமமான" சம்பளத்தை பெற சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கான ஒரு மசோதா சமீபத்தில் முடிந்த குளிர்கால கூட்டத்தில் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் ராஜ்யசபா இந்த மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்புள்ளது.
இதன்பிறகு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாக நடைமுறைக்கு வந்ததும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் மாத சம்பளம் ரூ.2.80 லட்சமாக உயரும். தற்போது அது ரூ.1 லட்சமாக உள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளும் தற்போதுள்ள ரூ.90,000 சம்பளத்திலிருந்து ரூ.2.50 லட்சம் என்ற சம்பள உயர்வை பெறுவார்கள். தற்போது மாதம் ரூ.80,000 பெறும் ஹைகோர்ட் நீதிபதிகள் இனிமேல் ரூ.2.25 லட்சம் சம்பளம் பெற முடியும்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததும், ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஊதியம் உயர்ந்துவிடும். அதாவது, இவர்களல் மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம் பெற முடியும்.